பொதுவாகவே ஒரு புத்தகத்தை வாசித்து முடித்த உடன் அது தரும் அனுபவங்களை எழுதுவதில்லை. ஓரிரு நாட்கள் முதல் ஓரிரு மாதங்கள் வரை ஆறப்போட்டு அப்போது வரை மனதில் நின்று அதிர்வடங்காமல் இருக்கும் புத்தகங்கள்,கதைகள் பற்றி எழுதுவது தான் என் வழக்கம். சித்துவின் கதைகளை வாசித்து இந்தா அந்தா என ஒரு வருடம் ஆகிவிட்டது. அடுத்தடுத்த வாசிப்பு, சொந்த காரியமாக பயண அலைச்சல்கள், பல அதி அற்புதமான சோம்பல் பொழுதுகள் என இவ்வளவு நாள் ஆகிவிட்டது. அதனால் ஒவ்வொரு கதையைப் பற்றியும் தனித்தனியாகக் கூறும் வாய்ப்பு இப்போது இல்லை. அதற்கு மறுவாசிப்பும் அவசியம். வாசித்த பிறகும் சோம்பல் படாது எழுத ஆரம்பிக்க வேண்டும். அது கூடாமல் போகவே வாய்ப்புகள் அதிகம். ஆதலால் முதல் முறை வாசித்ததை வைத்தே எழுதுகிறேன். அது போக, தொகுப்பின் ஒட்டு மொத்த வாசிப்பனுபவம் இன்னும் ஈரம் காயாது நினைவில் உள்ளது. அது உவர் தொகுப்பை அறிமுகம் செய்யும் அளவிற்காவது உதவும் என்னும் எண்ணத்தில் தான் இந்த கட்டுரையைத் தொடர்கிறேன்.
சித்துவின் கதைகள் அனைத்துமே என் புற உலகிற்கு நெருக்கமானவை. புளியங்குடி, சிவகிரி, ராயகிரி என நான் அறிந்த, வளர்ந்த நிலப்பரப்பிலிருந்து எழுதப்பட்டவை. அதனாலேயோ என்னவோ நான் அறியாத அளவுக்கு அகவுலக நெருக்கம் கொண்டுவிட்டவை. உவர் கதையில் வரும் நீலமேகம் மாமாவை அதன் பின் பலபேரிடம் கண்டுவிட முயன்றிருக்கிறேன். மலையாங்குளம் நைனா , லோடுமேன் இருமராஜ் அண்ணன், ரெங்கம்மா ஆட்டோகாரர் இப்படி பல பேரிடம். அந்த அளவிற்கு மண்ணோடு வேர்விட்டு ஊன்றி நிற்கும்படி எழுதப்படிருக்கும் பாத்திரம். உவர் கதையில் சித்து ஒரு நிலத்தை அறிமுகப்படுத்துகிறார். வளமான மண் கொண்ட நிலபரப்பிற்கிடையே ஓர் உவர் நிலம். திரும்ப திரும்ப வண்டல் அடித்து கரம்பை அடித்து அது பண்படுத்தப்படுகிறது. இருப்பினும் அந்த மண்ணின் உவர் தன்மை மேல் வராமலில்லை. அதைப் போலவே நீலமேகம் மாமாவின் மனதும் எப்போதும் வண்டல் அடித்து செழிம்பாக இருப்பினும் அதன் அடியாழத்தில் மீட்க முடியாத ஒரு உவர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் உழலும் இருவர் இருக்கின்றனர். அவர் மனைவியும், வாத்தியாரும். அவர்களுக்கு இடையேயான உறவு பற்றி நீலமேகம் மாமாவே கூறுவதும், அதன் மேல் அவருக்கு இருந்த புரிதலும் தான் உவர் கதையை முக்கியமான ஒன்றாக்குகின்றன. இதே தொகுப்பின் ‘சக்திகெடா’வில் வரும் அருவா நீலமேகம் மாமா கைக்கு வர வெகு நேரமாகாது. ஆனால் அப்படி வராததால் தான் ‘உவர்’ பெரும்பாலான கதைகளிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது. உணர்வும் அறிவும் மல்லுக்கட்டிக் கொண்டு கதையாடும் நாயகனாக நீலமேக மாமா மனதில் பதிகிறார்.
உவர், பிரில்லு பாவாடை, கெவி,English is a funny language ஆகிய கதைகளைத் தொகுப்பு வருவதற்கு முன்னமே தனிக் கதைகளாக இதழ்களிலோ இணையத்திலோ வாசித்திருக்கிறேன். ‘விடியல்’ கதையை முதன்முதலாகத் தொகுப்பில் தான் வாசித்தேன். உவரை விட சிறப்பாக வந்திருக்கும் கதை. கதையின் முதல் பத்தியை வாசிக்கும் யாரையும் கதையோடு கட்டிப் போடும் எழுத்து நடை. தவுடனின் பாத்திரப் படைப்பு வெகு இயல்பாக நம்மில் வந்து ஒட்டிக் கொள்ளும். தவுடன், அவனின் அம்மா, அவன் ஓடும் மகேந்திரா வேன், அதன் டிரைவர், அவர்களுக்கிடையேயான உறவு, பூக்காரியின் மகள், வாசுதேவநல்லூர் திருவிழாவில் வரும் வயசாளி இப்படி பல விசயங்கள் வெகு கச்சிதமாக எழுத்துச் சோர்வின்றி கூறப்பட்டிருக்கின்றன. எவ்வித பிடிமானமும் இல்லாது, விழித்து ஓடும் அவசியமும் அற்ற வாழ்வின் ஒரு அதிகாலை பளபளவென விடிகிறது. அதன் பளபளப்பில் தவுடனுக்கு பல பல விடயங்கள் அடைபட்டு விடுகின்றன. அவன் தனக்கான அடையாளத்தை, வாழ்வுக்கான அஸ்திவாரத்தைப் போட்டுக் கொள்ள நினைக்கிறான். அதோடு கதை முடிகிறது. ஆனால் அவ்வளவு எளிதில் நம்மால் அங்கிருந்து நகர்ந்து வந்துவிட முடியாது.
‘வளயம்’ என்றொரு கதை. ஊர் புறங்களில் வேட்டை நாய் வளர்ப்பது வேட்டைக்குச் செல்வது பற்றிய கதை. ஒரு நாள் பிழைப்பையும் விட்டு , நல்ல சோறு, தண்ணீர் இன்றி பதினைந்து இருபது கிலோமீட்டர் ஓடியும் நடந்தும் மலங்காட்டில் அவர்கள் திரிவது எதற்கு? கிடைக்கும் சில முயல்களுக்காவா? நிச்சயம் இல்லை. அதை சாதாரணமாவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அது ஒரு தனி உலகம். அதன் மேல் நாட்டம் கொண்டு , அதில் உழலும் சிலருக்கே சாத்தியப்படும் உலகம். வேட்டைக்குச் செல்பவர்கள் அது பற்றி சொல்லும் போதே, அதற்கான தேதி குறிக்கப்பட்டவுடனேயே பரபரப்படைந்து விடுகின்றனர். பத்து வயது குறைந்து விடுகிறது. கால்களில் தசை நார்கள் இறுகிவிடுகின்றன. உள்ளுக்குள் வேட்டை இரத்தம் பாயத் தொடங்கிவிடுகிறது. அந்நியர்களால் பிரவேசிக்க முடியாத நிலம் அது. நாகரிகம் என்னும் போர்வையினாலும், வனப் பாதுகாப்பு எனும் போர்க் கொடியினாலும் கொஞ்சம் கொஞ்சமாக மூச்சடைக்கப்படும் ஓர் உலகம். சித்து போன்றோர் இந்த உலகத்தைப் பற்றி இன்னும் விரிவாக எழுத வேண்டும். ‘வளயம்’ கதையே கூட ஒரு பெரும் நாவலின் ஒரு பகுதி போல் தான் பட்டது. நிறைவு சாத்தியப்பட்டதாகத் தெரியவில்லை.
பொதுவாக ‘உவர்’ தொகுப்பின் வாசிப்பில் சவாலாக நான் கருதுவது சிறுகதை திடீரென கிளைத்து எங்கோ சென்று திரும்புவது. ‘கெவி’, ‘விடியல்’, ‘உறைதல்’ போன்ற கச்சிதமாக எழுதப்பட்ட கதைகளைத் தவிர்த்து அநேகமாக மற்ற எல்லா கதைகளுமே இடையிலேயே தனது பாதையை விட்டு விலகிச் செல்வதை உணர முடிகிறது. அதை ஆசிரியர் தன் எழுத்து வன்மையால் மீட்டு இழுத்து வருகிறார் என்பது வேறு விடயம். இருந்தும் உவர் போன்ற ஆகச் சிறந்த கதைகளிலேயேக் கூட இந்தப் பிரச்சனை உள்ளது. வாசித்து நாள்பட்ட பின்னான இப்போது துல்லியமாகக் கூற முடியவில்லை என்றாலும், மையத்தை விட்டு விலகித் திரிந்த ‘உவர்’ கதையை ‘ கூதியாங் குளிர்ந்து போனான் மச்சான்’ என்னும் வரி தான் மீண்டும் இழுத்து வந்து தரையில் நிறுத்தியதாக நினைவு. இதை உணர்ந்ததும் மூன்றாம் முறை வாசிப்பின் போது தான்.முதல் இரு முறை எதையும் கவனிக்க விடாத அளவிற்கு கதையின் ஓட்டம் இருந்தது குறிப்பிடத் தக்கது.
மொத்தத்தில் ‘உவர்’ மிக முக்கியமானதொரு சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்பிலேயே இவ்வளவு ஆழமான கதைகளை எழுதுவதெல்லாம் லேசான காரியமில்லை. இதற்கு முன் நான் வாசித்து வியந்த முதல் தொகுப்பென்றால் அது நாஞ்சில் நாடனின் ‘தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்’. சிவசித்து இந்த மண்ணிற்கு கிடைத்த மிகச் சிறந்த கதை சொல்லி. அவரின் அடுத்த அடுத்தத் தொகுப்புகள் இன்னும் அதிகமாக இந்த மண்ணையும், மக்களையும் நவீன இலக்கிய வெளியில் உலவ விடட்டும். அதை காலம் சாத்தியமாக்கட்டும்.
தொகுப்பு – உவர்
வகை – சிறுகதைகள்
ஆசிரியர் – சிவசித்து
பதிப்பகம் – மணல்வீடு