அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்

ஜெயகாந்தனின் அதிகம் கவனிக்கப்படாத படைப்பு. ‘இந்த நேரத்தில் இவள்’, ‘பாட்டிமார்களும் பேத்திமார்களும்’, ‘அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்’ ஆகிய மூன்று நாவல்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒரு நாவலில் குழந்தையாக வரும் கதாபாத்திரம் மற்றொன்றில் வயோதிகமாக வந்து அதன் அனுபவத்தையும் வாழ்க்கையின் எதார்த்தத்தையும் பகிர்ந்து கொள்கிறது.

‘அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்’ நாவல் அப்பு எனும் பதின் வயது சிறுவனையும் அவன்தன் குடும்பத்தின் முந்தைய தலைமுறைப் புதிர்களை அவிழ்ப்பதை நோக்கியே விரிந்து செல்லினும், ‘குழந்தை உழைப்பு’ பற்றி நாவலில் வைக்கப்படும் கருத்து கவனிக்கத் தக்கது. இது பற்றி நாவலின் முன்னுரையிலேயே இவ்வாறு குறிப்பிடுகிறார் ஜெ.கே , ‘குழந்தை உழைப்பை கொடுமையாக்குவது எது? எல்லோருடைய உழைப்பும் சுரண்டப்படுகிற ஒரு சமூக அமைப்பில் உழைப்பின் மீதே மதிப்புக் குறையத் தான் செய்யும்’ ஆக, ஜெ.கே கருத்தின் படி குழந்தை உழைப்பு தவறானதல்ல ஆனால் குழந்தைத் தொழிலாளர் முறை தவறானது. சுரண்டல் தவறானது. இவை இரண்டும் ஒன்றோடென்று பிணைந்தக் கூற்றுகளெனினும் நாவலை ஆழ்ந்து வாசிக்கும் போது இந்த இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் புலப்படுகிறது.

அப்புவை யாரும் வேலை செய் என்றோ இன்ன வேலையை செய் என்றோ வற்புறுத்துவதில்லை. அவன் மனதிற்கு பிடித்த வேலையை அவன்  செய்கிறான்.அவனுக்குப் பிடிக்கவில்லையெனில் நின்று கொள்கிறான். இது குழந்தை தொழிலாளருக்குப் பொருந்தாது. அப்பு தன் தகப்பனின் குடும்ப பாரத்தை இலகுவாக்கும் பொருட்டும்,அம்மாவின் ஆசையை ஈடேற்றும் பொருட்டும் அவனுக்கு கிடைத்த வேலையை செய்கிறான்.அங்கு தன் தன்மானத்திற்கும்,சுயமரியாதைக்கும் பங்கம் ஏற்படும் சமயங்களில் எவ்வித சமரசமும் இன்றி அவ்வேலையை  விட்டு விலகுகிறான். இது தான் அப்பு. இவ்வாறு தான் அவன்  வாழக் கற்றுக் கொண்டிருக்கிறான், வாழ உறுதி கொண்டிருக்கிறான்.

ஆறு வருடங்களுக்கு முன் தன் சொந்த கிராமத்தை விட்டு, குடும்பத்தை விட்டு சென்னை வந்துவிட்ட தந்தையை சந்திக்கும் அப்பு அவருக்கு இங்கும் ஓர் குடும்பம் இருப்பதை அறிந்ததும் அவர் மீது வெறுப்போ கோபமோ கொள்வதில்லை மாறாக அவன் அவரை மேலும் புரிந்து கொள்ளவே விரும்புகிறான். அப்பாவும் தன் வாழ்க்கை கதைகளை ஒவ்வொரு நாளும் அவனுக்கு கதைகளாகக் கூறுகிறார். இதுவே ‘அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்’.

Published by கிருஷ்ணா

it's me

Leave a comment