வற்றா நதி – கார்த்திக் புகழேந்தி – வாசிப்பனுபவம்

உலகில் எவ்வளவோ நதிகள் உண்டு. எவ்வளவோ கல் மண்டபங்கள் உண்டு. ஆனால்,நதியையும் கல் மண்டபத்தையும் ஒருசேரக் காணும் எந்த நெல்லை மாவட்டத்தானுக்கும் அடுத்த நொடி அவன் மனம் நிற்பது தாமிரபரணிப் படித்துறையில்.

வற்றா நதி நூலின் முகப்பு அட்டையின் வடிவமைப்பு சந்தேகமேயின்றி அந்த மனநிலையைத் தருகிறது.உண்மையில் வற்றாநதி சிறுகதைத் தொகுப்பை வாங்குவதற்கான உந்துதலே அதிலிருந்து தான் ஆரம்பித்தது.மொத்தம் 21 கதைகள் கொண்டத் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் ஒரு முயற்சி. கதையின் வடிவத்தில் கதையாடும் விதத்தில் ஒவ்வொன்றும் ஒரு ரகம். குறிப்பாக

கிறிஸ்டி ஒரு டைரிக் குறிப்பு’ சிறுகதையின் வடிவம் டைரிக்குறிப்பின் வடிவத்திலேயே எழுதப்பட்டு அதே சமயம் சிறுகதைக்கானத் தாக்கத்தையும் ஏற்படுத்திவிடிகிறது.

‘169 கொலைவழக்குகள்’ மேலாட்டமாக, கதைசொல்லும் விதத்தில் சாதாரண கதையாகத் தோன்றினாலும் அது பேசும் தனிமனித உளச்சிக்கல் அதனை முக்கியமான கதையாக்குகின்றது. சிறுவயதிலிருந்தே விமானியாக வேண்டுமென நினைக்கும் ஒருவன் ஊர்ப் பேச்சை புறம் தள்ளி, நிலபுலன்களை  விற்று தன் இலட்சியத்தை அடைகிறான். தான் வென்றுவிட்டதாக எண்ணிப் பெருமித வாழ்க்கை வாழும் சமயத்தில் அவன் ஓட்டிச் செல்லும் விமானம் விபத்துக்குள்ளாகிறது.அவனைத் தவிர விமானத்தில் பயணம் செய்த பயணிகள்,சக ஊழியர்கள் என அனைவரும் உயிரிழந்துவிடுகின்றனர். அவர்கள் அனைவரின் மரணத்திற்கும் ஒரே சாட்சியாக, ஒரே காரணியாகத் தன்னை எண்ணிக் கொள்கிறான். இந்த உணர்வு அவனை 169 பேரையும் அவனே கொன்றுவிட்டதான மனநிலைக்கு எடுத்துச் செல்கிறது. சிறுகதையில் இத்தகைய உளச்சிக்கலை கடத்துவது சிறிது கடினமாயினும், கதையாசிரியர் தன் சீரிய வார்த்தை கட்டமைப்பாலும், தெளிவான கதைத்தலைப்பினாலும் அதை எளிதாக சாத்தியப்படுத்தியிருக்கிறார்.

இதே போல் உளவியலைக் கருவாகக் கொண்டு அமைந்துள்ள மற்றொரு கதை ‘உதிர்ந்து விழும் அஸ்திவாரங்கள்’. ஐம்பத்தைந்தை தாண்டிய ஒருவர் அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்ற பிற்பாடு தன் மனைவியுடன் எவ்வாறெல்லாம் நாளைச் செலவழிக்க வேண்டும் என திட்டமிடுகிறார். இத்துணை வருடங்கள் தனக்காக, தன்னையே அர்பணித்துக் கொண்ட துணைவிக்கு இனியேனும் உதவியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணிக் கொள்கிறார். நாட்கள் செல்கிறது ஓய்வுபெறும் நாளும் வருகிறது அன்றே அவரது மனைவியும் இறக்கிறார்.திட்டங்கள் தவிடு பொடியாகின்றன.மனம் விட்டு பேச பிள்ளைகள் இல்லை, மனதை மடை திருப்ப பேரன்|பேத்தி இல்லை.புலம்பெயர் வாழ்க்கையில் ஆறுதல் சொல்ல சொந்த ஊர் மக்களில்லை. தனிமை வெளியில் அவர் மனம் மனைவியையேச் சுற்றிச் சுற்றி வருகிறது. இது தான் ‘உதிர்ந்து விழும் அஸ்திவாரங்கள்’ கதையின் பேசுபொருள். உணர்வால் அணுக வேண்டிய இக்கதையை போதுமான விவரிப்புகளாலும் ,  கடகட சொல்லமைப்புகளாலும் , நாயகனின் மனநிலையை  செம்மையாக நமக்கு கடத்திவிடுகிறார் கதாசிரியர்.

‘சிவந்திபட்டி கொலைவழக்கு’, ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘பொங்கலோ பொங்கல்’ கதைகள் முறையே ஏமாற்றத்தின் குரோதத்தையும், பதின்பருவ காதலின் வலியையும், வாலிபத்தின் குசும்பையும் திகட்டாது பரப்பிச் செல்கின்றன.

இந்த மொத்தத் தொகுதியிலும் 2 கதைகள் என் மனதிற்கு மிக நெருக்கமானவை. முதலாவது ‘குடுப்பினை’. குடுப்பினை கதையை பிடிக்க காரணம் அது நான் நினைப்பதையே பேசுகிறது.என்னை பிரதிபலிக்கிறது அல்லது நான் அதில் வரும் காந்தியைப் பிரதிபலிக்க முயன்று கொண்டிருக்கிறேன்.சொந்த ஊரை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் குடுப்பினை பிடிக்கும் என்றே நினைக்கிறேன். அடுத்ததாக, ‘அப்பாவும் தென்னைமரங்களும்’.சுயவரலாறு போல் நீளும் கதையில் அதன் இயல்பான எழுத்து நடையும், சூழலியல் விவசாயம், இயற்கை விவசாயம் குறித்த அவசியமும் விவரிப்புகளும், கதை முழுக்க பொதிந்துள்ள யதார்தங்களும், கதையினைவிட்டு எட்டிவிடாதபடி கெட்டியாகப் பிடித்துக் கொள்கின்றன. நிச்சயமாக, ‘அப்பாவும் தென்னைமரங்களும்’ நெய்யில் இட்ட முருங்கையிலை போல மணமான கதை.

‘காற்றிலிடைத் தூறலாக’ மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இளைஞர் ஒருவரைச் சுற்றி நகரும் கதை. கிட்டத்தட்ட, சொந்த ஊரைவிட்டு வேலையின் பொருட்டு புலம்பெயர்ந்த இன்றைய தலைமுறை மென்பொறியாளர்கள் எண்ணத்தின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாகவே இக்கதையை கூறலாம். அந்த வகையில் சமூகத்திற்கு அறிமுகம் செய்யப்பட வேண்டிய மிக முக்கியமான கதை. ஆனால் வாசிப்பின் ஓட்டத்தில் சேரும் முன்னரே கதை அவசரமாக அதன் முடிவை அடைந்துவிடுவது போன்று தோன்றுவது கதையை சுவாரஸ்யமற்றதாக்கிவிடுகிறது.

இதே போல், ‘பற்றியெறியும் உலை‘ கூடங்குளம் அணுஉலைப் போராட்டத்திற்கு ஆதரவான ஒரு சித்தரிப்புக் கதை. அணுஉலைக் கழிவுகளாலும், விபத்தினாலும் ஏற்படும் பாதிப்புகளை விவரிக்கும் ஒரு புனைவு. இங்கு கதை நிகழும் காலம் எதிர்காலம் என்பதாலும் அதை கதையின் ஓட்டத்தில் சரியாக ஒட்டச் செய்யாததாலும் கதையை உள்வாங்குவதில் சிக்கல் வருகிறது.மற்றபடி கதை தன் முடிவினை நெருங்குகையில் தான் சொல்ல வந்ததை சரிவர வாசகர்களுக்குக் கடத்திவிடுகிறார் ஆசிரியர்.

மொத்தத்தில், ‘வற்றா நதி’ தொண்ணூறுகளில் பிறந்து, நாவிலும், மனத்திலும் ஊரைச் சுமந்து திரியும் எந்தவொரு நெல்லை மாவட்டத்தானுக்கும் ஒரு நினைவுப் பெட்டகம். இதில் வரும் பெரும்பாலான கதைகள் திருநவேலி வட்டார வழக்கிலேயே அமைந்திருப்பது கதைகளை எளிதாக அவ்வாழ்க்கையுடன் இணைக்கிறது. இக்கதைகளின் மாந்தர்கள் நாமாகவோ அல்லது நம் நண்பனாகவோ அல்லது நண்பனின் நண்பனாகவோ அல்லது அவன் ஊர்காரனாகவோ இருக்கிறான். அதனால, மாப்ளைகளா.. யாரு இந்த புக்க வாசிக்காகலோ இல்லயோ நம்ம பயலுக கண்டிப்பா வாசிக்கனும்டே. ஏனா, இது நம் மக்களின் கதைப் பெட்டகம்.

புத்தகம் –  வற்றா நதி
ஆசிரியர் – எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி
பதிப்பகம் – ஜீவா படைப்பகம்

Published by கிருஷ்ணா

it's me

2 thoughts on “வற்றா நதி – கார்த்திக் புகழேந்தி – வாசிப்பனுபவம்

  1. ஊருக்குப் போகிற அன்னைக்கு பார்த்து சேக்காளி ஒருற்றன் எதிர் பேரூந்திலிருந்து நகரத்திற்குள் வந்திறங்கி, சவுக்கியம் விசாரித்த மாதிரி இருக்கிறது.

    Liked by 1 person

    1. சேக்காளிக்கு நன்றிகள் 🙂 அடுத்த ஆரஞ்சுமிட்டாய் சுவைக்கத் திட்டம். மிட்டாய் சாப்பிட்டுவிட்டு எழுதுகிறேன்.

      Like

Leave a comment