எமலோகத்தின் வாசற்கதவொன்றும் திரைப்படங்களில் காண்பிப்பது போன்று அரண்மனைக் கதவு போலில்லை. மாறாக, குடிசை வீட்டின் இழுகதவைப் போல் தான் உள்ளது. இறந்து முழுதாக ஆறு மணி நேரம் கூட ஆகாத மாதவன் எனும் உடலாகிய சட்டையை உதறி விட்டு வந்திருந்த மானுட ஆத்மாவின் எண்ண ஓட்டம் தான் இது.
மாதவன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். அங்கு கிங்கணர்கள் இல்லை,சித்ர குப்தன் இல்லை,எமனும் இல்லை மற்றும் எவனும் இல்லை. அவன் கற்பனை செய்த ஏதும் இல்லா எமலோகம் ஏமாற்றம் மிகுந்ததாகவும் பயம் தருவதாகவும் இருந்தது. அங்கும் இங்கும் பார்த்துப் பார்த்து கலைத்தவனாய், அருகில் இருந்த திண்ணையில் அமர்ந்தான். அவன் பார்த்த வரையில் பூலோகத்திற்கும், எமலோகத்திற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை, சூழலைத் தவிர. சுத்தமான காற்று, புடைசூழ மரங்கள், நிரம்ப அமைதி, வடக்கே சூரியன்,தெற்கே சந்திரன் என நிறைவாய் வழிந்தது எமலோகம்.
அவன் அமர்ந்திருந்த திண்ணையின் வீட்டிலிருந்து பெரியவர் ஒருவர் வெளியே வந்தார். வந்திருக்கும் நபர் புதியவர் என அவருக்குப் புரிய வெகு நேரம் ஆகவில்லை. புரிந்ததும் அவர் கண்ணில் ஆதரவாய் ஒரு புன்னகை, முகத்தில் சிரிதாய் அன்பருவி.
என்னப்பா, இது எமலோகந்தானா?இல்ல வேற எதுவும் உலகத்துக்கு மாறி வந்துட்டோமானு நினைக்கிறியா? – பெரியவர்
ஆம். மாதவனுக்கு அந்த சந்தேகம் இருக்கத்தான் செய்தது. எனினும், எமலோகத்தின் ததும்பும் அமைதியும் இதமான காற்றும் அவனை எங்கோ லயித்திருக்க செய்தன.ஆனால், இவரிடம் ஆம் என்பதா?இல்லை என்பதா? இவர் யார்? ஒரு வேளை இவரே எமனாக இருப்பாரோ?சே இல்லை. எமன் ஆஜானுபாகுவாக பூண்களும் கிரீடமும் தரித்திருக்கமாட்டானாயினும், நிச்சயமாக தேறிய ஆகிருதியுடன் முன்முதிர் வயதினனாகத்தான் இருப்பான் என எண்ணியவனாய், வெறும் புன்னகையை மட்டுமே பதிலாக அளித்தான்.
இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் ஆகாமலேயே அவர்கள் முன் நீண்ட, ஒற்றையடிப் பாதையில் நடக்க ஆரம்பித்தனர். அதானே, உடலாகிய காற்றடைத்த பைக்குத் தானே மாதவன்,ஆதவன்,மணி என அறிமுகம் தேவை. அனைத்தையும் துறந்த ஆத்மாவிற்கேது பெயர்!
தரையை நோக்கியே பார்வையை பதித்து வந்த மாதவனின் முகத்தில் சிந்தனை ரேகை தறிகெட்டோடியது. காட்டு வெள்ளமாய் அடைப்புடைத்த சிந்தனை வார்த்தைகளாய் கொட்ட ஆரம்பித்தது.
நாம் போய்க் கொண்டிருப்பது சொர்க்கத்தை நோக்கியா இல்லை நரகத்தை நோக்கியா? – மாதவன்
ஞானத்தை நோக்கி – பெரியவர்
மாதவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒரு நொடி பெரியவரின் முகம் பார்த்தான். அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை ,அலைகள் அற்ற ஆழ்கடல் போல. அவர்கள் நடை தொடர்ந்தது.
உள்ளே செல்ல செல்ல ஒருபுறம் அழுகைகளாகவும் மறுபுறம் அமைதிப் பூங்காவாகவும் காட்சியளித்தது அப்பாதை.பெரியவர் இடது புறத்தைக் காட்டி, அதோ அங்கே ஆண்களும்,பெண்களும்,குழந்தைகளும் ஓலமிட்டுக் கொண்டிருக்கிறார்களே அதுதான் நரகம். இதோ ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மாறா புன்னகையோடும் பெருமிதத்தோடும் நெஞ்சுயர்த்தி திளைக்கிறார்களே, இதுதான் சொர்க்கம்.வா அருகில் சென்று பார்க்கலாம் என்றார். முதலில் அவர்கள் நரகத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
வழியெங்கும் பூந்தோட்டமும்,மரங்களும், நெடுக அமைந்திருக்க உள்ளே மக்கள் கூட்டத்தின் அழுகை மட்டும் நில்லாமல் எழுந்து கொண்டிருந்தது. மாதவன் இப்போது இன்னும் உன்னிப்பாய் நரகத்தை கவனிக்கலானான். அங்கு ஓர் ஓரத்தில் விசாலமான அரச மர நிழலில் நான்கு பெரியவர்கள் கொண்ட குழு ஒரு ஆத்மாவிற்கு தண்டனை வழங்கி கொண்டிருந்தது.அது ஒரு மருத்துவமனையின் உயர் நிர்வாகியாக இருந்த மருத்துவரின் ஆத்மா. பூமியில் புரிந்த பாவ,புண்ணியங்களை துலாமில் நிறுத்துப் பார்க்க பாவத் தட்டு இறங்கி,புண்ணியத் தட்டு மேல் நின்றதால், தண்டனை நிறைவேற்றப்பட நரகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.அங்கு அதன் பாவக் காட்சிகள் வான் திரையில் ஒளிபரப்பி காட்டப்பட்டன.
அறுவை சிகிச்சைக்கு பணம் கட்டவில்லையெனில் தூக்கி எறி அவனை எனக் கூறி மருத்துவமனையை விட்டு வெளியேற்றப்பட்ட இருதய நோயாளியின் கடைசி நிமிடங்கள் அங்கு ஒளிபரப்பப்பட்டது. நோயாளியின் இறுதி ஊர்வலத்தில் அவனது காதல் மனைவி கதறி அழுது நிற்க, மிட்டாய் வாங்க அடம்பிடித்து அழுது புரண்டது குழந்தை. அது அறியுமோ தன் தந்தையின் இழப்பை ,தாயின் தவிப்பை, சூன்யமாகிப் போன அதன் எதிர்காலத்தை.அழுது புரண்ட சேயை அள்ளி அணைத்த தாயைக் கண்டு கதறி அழுதது மருத்துவரின் ஆத்மா.
மாதவனும் கசிந்த கண்களுடன் நகர்ந்து அடுத்த ஆத்மாவின் தண்டனையை கவனிக்கத் தொடங்கினான்.அது ஓர் ஏழை விவசாயியின் ஆத்மா.
ஓர் ஏழை விவசாயி என்ன பாவம் செய்திருக்கக் கூடும் என மாதவன் ஆவலுடன் எதிர்பார்க்கலானான்.விவசாயியின் பாவக் காட்சிகள் திரையிடப்பட்டன.அவன் நிலத்தில் ஓங்கி நின்ற பனை மரங்கள் சொற்ப பணத்திற்காக வெட்டப்பட்டதால் வீடிழந்த கிளி ஒன்று அழுது புலம்பும் காட்சி ஒளிபரப்பப்பட்டது.மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வந்த பாரம்பரிய பொந்தை இழந்த துயரம் அதன் நெஞ்சை அடைத்தது.கூடின்றி தவிக்கும் தன் பிள்ளைகளை எண்ணி துயர் கொண்டது.அருகில் தன் சகோதரியின் வீழ்ச்சிக்காக அழும் பனை மரங்களின் ஓலங்கள் கிளிகளின் வேதனைக்கு தூபம் போட்டன.தன் சுயநினைவின்றி நடந்த இந்த இன்னல்களை அறிந்த விவசாயியும் கண்ணீர் விட்டழுதான்.ஆத்மா என்றானபின் மரம் என்ன?கிளி என்ன? கிரீடம் கொண்ட மன்னன் தான் என்ன?
மாதவன் பெரியவர் இருந்த இடம் நோக்கி நகரத் தொடங்கினான்.பெரியவர் புரிந்து கொண்டார், இருவரும் சொர்க்கம் நோக்கி நடக்கத் தொடங்கினர்.
சொர்க்கம் செல்லும் வழியும் நரகம் செல்லும் வழியைப் போன்றே மரங்கள்,செடிகள்,கொடிகள் என இயற்கை மனம் கமழ இருந்தது. மாதவனின் சிந்தனை முழுவதும் நரகத்தில் அவன் கண்ட காட்சிகளையேச் சுற்றிச் சுற்றி வந்தது. இதுநாள் வரையிலும் நரகமானது எண்ணைச் சட்டிகளும்,இரும்புச் சங்கிலிகளும்,ஊசிப் படுக்கைகளும் நிரம்பிய வதைக்கூடம் என்றே எண்ணியிருந்தான். பூவுலகில் உடலை விட்டு வந்த பின்னும் நரகத்தில் உடல் சார்ந்த வதைகள் எப்படி சாத்தியம் போன்ற பூலோக கேள்விகளுக்கான விடை இன்று நரகத்தில் அவனுக்கு கிடைத்தது.
பூவுலகில் வாழ்ந்த காலத்தில் தன் சுயநலனுக்காக சிந்தித்த,செயல்பட்ட எந்த உயிரும் இறந்த நொடியினில் சுயநலமற்ற, உயர்வு,தாழ்வு பேதமற்ற ஆத்மாவாகிறது.அதானால் தான் பூவுலகில் தன் சுயநலத்திற்காக செய்த பாவங்களை ஆத்மாவால் சகிக்க முடியவில்லை.பாவக்காட்சிகள் திரையிடப்படும் போது துடிதுடித்து கசிந்துருகி தன் பாவங்களுக்காக வருந்தி மோட்சத்தைத் தேடிக் கொள்கிறது. இவ்வாறாக எண்ணிக் கொண்டிருக்கையிலேயே மாதவனும்,பொரியவரும் சொர்க்கத்தை அடைந்திருந்தனர்.அங்கும் நான்கு பெரியவர்கள் ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்து ஆத்மாக்களுக்கு அவர்களது புண்ணிய நிகழ்வுகளை திரையிட்டுக் காட்டிக் கொண்டிருந்தனர்.
நரகம் போல் அன்றி சொர்க்கத்தில் ஆத்மாக்கள் உவகையுடனும் பெருமித்துடனும் சுற்றித் திரிந்தன.தாங்கள் செய்த நற்காரியங்களை திரையில் கண்டு உவகையில் திளைத்தன.
ஒரு பிச்சைக்காரனின் ஆத்மா, அவன் தன் சக்திக்கு ஏற்ப செய்த அன்னதானத்தால் உயிர் காக்கப்பட்டு மகிழ்வுடன் வாழும் நாய்க் குட்டியைக் கண்டு இன்புற்றான்.
உடலை விற்று உயிர் வளர்த்த விபச்சாரி ஒருத்தியின் ஆத்மா, கருகும் நிலையில் இருந்த வாழை மரத்திற்கு நீர் விட,அதனால் உயிர் பிழைத்த மரம் குழை தள்ளி அதன் பழங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு தானம் செய்யப்படுவதைக் கண்டு மகிழ்ந்துருகினாள்.
இவற்றையெல்லாம் கண்டு வியந்து கொண்டிருக்கையிலேயே மாதவன் தன் பாவபுண்ணியங்களை தானே துலாமில் ஏற்றி நிறுத்துப் பார்க்க, பெரியவரின் கை மாதவனின் தோளை அழுத்தியது. மாதவனுக்கு புரிந்தது. சொர்க்கத்தின் மென்மையான அமைதியினூடே அவர்கள் நரகம் நோக்கி நடக்கத் தொடங்கினர்.
————————————————–முற்றும்————————————————————————
-ம.கிருஷ்ணகுமார் சிறுகதை
சித்திரை-30, திருவள்ளுவர் ஆண்டு – 2048
மே-13, ஆங்கில ஆண்டு-2017